எண்ண முகில்கள்

காலப் பதிவுகளின் கோலத் தமிழ்!!

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
விளக்கின் அருமை புரிந்திட இருட்டு வர வேண்டும். மனிதாபிமானத்தின் முக்கியத்துவம் புரிந்திட..?
Dienstag, August 12, 2008
தண்ணீரும் கண்ணீரும் இரண்டறக் கலந்து...
உயிர்களும் உடைமைகளும் ஒன்றாக அழிந்து...
பக்தியும் அதிர்ச்சியும் இணைந்ததிர்ந் தியங்கி...
மகிழ்ச்சியும் அமைதியும் மண்ணாகி மறைந்து...
பாசமும் அன்பும் பஞ்சாக மறைந்து...
உறவும் சொந்தமும் ஒரே நொடியில் மறைந்து...
இந்த உலகத்தின் ஒருபகுதி துடியாய்த் துடித்துப் பாடாய்ப் பட்டு...
அவலமாய் அழிந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் நமது வாழ்நாளின் மிகப் பெரிய அனர்த்தமான இந்தச் சுனாமி என்கின்ற நிலநடுக்கத்துடன் இணைந்த கடலெழுச்சியானது ஏற்படுத்தி விட்டிருக்கிற பாரிய பாதிப்புக்களும் இழப்புக்களும் இந்த சகாப்தத்தின் கண்ணீர்க் காவியமாகப் பதிந்து இந்த முழு உலகத்தையுமே இப்போது வாட்டிக் கொண்டிருக்கின்றது.

தாங்கிடக் கடினமான இந்த துயரம் நிறைந்த வேளையிலும் இதன் மூலம் ஏதாவது நன்மை கிடைக்க வழி ஏற்பட்டிருக்கக் கூடுமா என்றும் இதன் பின்னணியை எவ்வாறு சாதகமாக நமபலாம் என்றும் நாம் சிந்தித்துப் பார்ப்பதுதான் நமக்கும் நமது எதிர்கால சந்ததிக்கும் ஆறுதலையும் அறிவுறுத்தலையும் வழங்கிடும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தர முடியும் என நம்ப வேண்டிய கட்டாயம் நமக்கு இப்போது ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

இணைந்து செல்வதற்கும் அடக்கி இணைத்துச் செல்வதற்கும் வித்தியாசமிருக்கின்றது. ஒற்றுமைக்கும் அழுத்தத்தின் இணைவுக்கும் வித்தியாசமிருக்கின்றது.

இயற்கையோடு இணைந்து இயங்கிக் கொண்டிருக்கும் பிற உயிர்களினால் என்றைக்குமே உலகுக்கு ஆபத்து ஏற்பட்டதில்லை. அதனை அடக்கித் தன் திசைக்குத் திருப்ப முற்படும் மனித குலத்தினால்தான் ஆபத்து விளைந்திருக்கின்றது.

இயல்பான வாழ்க்கையை விட்டு விட்டு மனித குலம் தன்னிச்சையாகப் படைத்துக் கொள்ள விழைந்த சுகங;களின் அடிப்படையில்தான் பணம் தோன்றி வறுமையை அழைத்துக் கொண்டது. வர்த்தகம் தோன்றித் தட்டுப்பாடுகள் உருவாகின. பத்திரப்படுத்தும் வழிகள் மூலம் தேவைக்கதிகமாகச் சேமிக்க விழைந்து உயிரினங்களினழிவு அதிகமாகியது.

உழைத்து வாழ வேண்டிய இயற்கை வழிகளை மனிதன் தனக்காகவென்று வகுத்துவிட்ட சொகுசு வழிகள் தவிர்த்ததனால் அவனது உடலுழைப்பு குறைந்தது. அதனால் உடற்பயிறசிகள் குறைந்தன. அதனால்தான் நோய் நொடிகள் அதிகரித்து படிப்படியாக முழு உலகுமே நோயாளியாகிக் கொண்டு இருக்கின்றது.

இயறகைக்கு மீறிய ஒழுக்க மீறல்களினால் அவனது வாழ்வின் காலமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவிட்டது.

மனித அறிவின் விஞ்ஞான வளர்ச்சியானது படிப்படியாக கண்டு பிடிக்கும் தனது ஆற்றலைப் படைத்திடும் ஆற்றலுக்குச் சமனான நிலையில் வைத்துக் கொள்ளத் தீர்மானித்தவாறு புதுப்புது நடவடிக்கைகளை வகுத்திடவும் எடுத்திடவும் துணிந்திட்ட தவறான போக்கின் பலனாகத்தான் இயற்கையின் இயல்பான போக்குகளிலெல்லாம் பெரும் மாற்றறங்கள் ஏற்பட்டு வருகின்றன.

ஆத்திகனோ நாத்திகனோ இதில் ஏதோ ஒரு விதிக்கு எதிரான நடைமுறை இருப்பதையும் இப்போது நடக்கத் தொடங்கியுள்ள அத்தனை இயற்கை அனர்த்தங்களுக்கும் அடிப்படையில் தானாக நடக்காத, ஆனால் செய்யப்பட்ட எதற்கோ எதிராக நடந்த பிரதி நடவடிக்கையாகவே இவை நடக்கின்றன என்பதையும் மறுத்திடுமளவிற்குக் கருத்து வேறுபாடு இருக்கக்கூடும் என நம்புவதற்கில்லை.

அன்றைய ஆன்றோர்கள் இறைவனை உணர முயன்று அதற்கான வழிகளாகப் பல வழிகளை வகுத்து அவற்றுக்குள் காரண காரியங்களை உள்ளிருத்திக் கதைகளும் அறிவுரைகளும் சேர்த்து அமைத்து நமக்கு அளித்திருக்கின்ற மதங்களின் பெயர்களில் மட்டும் வெறும் நம்பிக்கையை வைத்து அதை வைத்து சொர்க்கத்துக்குப் போய்விடலாம் என நம்பும் ஏமாளித்தனமான கற்பனையைப் பரப்பிவிட்ட மதவியாபாரிகளினால்தான் மதங்களுக்குள்ளிருக்கும் மனித மனவியாதிகளுக்கு மதம் பிடித்து மதவெறிகள் வளர்ந்து திக்கெங்கிலும் பகை செய்து கொண்டிருக்கின்றன.

ஆனால் கூர்ந்து அவதானித்தால் எந்த மதமுமே தன்னுடன் சேர்ந்து கொண்டால் சொர்க்கம் சென்று விடலாமென்று சொல்லவில்லை என்றும் அவனவனின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே பலன் கிடைக்கும் என்பதையே சொர்க்கம் நரகமாகக் குறிப்பிடுகின்றன என்றும் புரியும்.

இந்த அடிப்படையில் பார்த்தால் எம்மதமும் எவருக்கும் எதிரானது அல்லவென்பதும் சுயநலமிகளின் பொறிகளும் வலைகளுமே இந்தப் பேதப்படுத்தி இலாபம் விழையும் திருவிளையாடல்கள் என்பதும் புரியும்.

இன்றைய இயற்கையை ஆக்கி நடத்துகின்ற சக்திகள் மூன்றே மூன்றுதான்.

அவைதான் நீர், காற்று, நெருப்பு என்பன. அதாவது இயற்கையின் அடிப்படை சக்திகளாக இவை மூன்றுமே இருக்கின்றன. இவற்றுடன் இணங்கி வாழ்ந்தால் பாதுகாப்பும் துர்ப்பயன் செய்தால் மரணமும்தான் விதிகளாகின்றன.

கிறிஸ்தவம் சொல்கின்றது. இறைவன் ஆள் வகையில் மூவராய் இருக்கின்றார் என்று. இந்து மதம் அதே இறைவனை பிரம்மா, விஷ்ணு, சிவன் என ஒன்றாகக் காணுகின்றது.

இந்த ஆள் என்பதன் பொருள் இயக்குபவர் என்று கொண்டால் இயற்கையைத்தான் இறைவனாக ஆன்றோர்கள் கண்டிருக்கின்றார்கள் என்பது புரிகின்றதே! அதை மீறினால் தண்டனை என்பதுவும் புரிகின்றதே! இதற்குள் மதமாவது மண்ணாங்கட்டியாவது!

இந்த “இறைவன் ஒருவனே! ” என்று போதிக்கும் மதவாதிகள் அந்த இறைவனுக்குப் போட்டியாக இன்னொரு இறைவன் இருப்பதாக நம்புவதும் அவனைக் கண்டு அஞ்சுவதாகக் கடவுளே இவர்களிடம் காட்டி “அவனை வணங்காதே! என்னையே வணங்கு!” என்று கட்டளையிட்டுக் கெஞ்சுவது போலவும் மத ஒட்டிகளுடன் பொது மக்களை நம்பும்படிச் சொல்லி நாடகமாடும் பொய்காரப் பம்மாத்துக்களால்தான் உலகமே இன்று இப்படி அவலப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

இந்த நிலையில்தான் சுனாமியென்ற சூறாவளிச் சம்பவம் கடவுளின் கடும் எச்சரிக்கையாகவும் அறிவுறுத்தும் பாடமாகவும் இப்போது நமது கண்முன்பாக நடந்திருக்கின்றது.

இந்த அழிவில் இன பேதமென்றும் மத பேதமென்றும் மொழி பேதமென்றும் தேச பேதமென்றும் எதுவுமே கடைப்பிடிக்கப் படவில்லை.

இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், ஆத்திகர்கள், நாத்திகர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், உயர் சாதிக்காரர், தாழ்த்தப்பட்ட சாதிக்காரர் என்ற வேறுபாடுகளையும் சகல மொழி வேறுபாடுகளையும் நில வேறுபாடுகளையும் கடந்து, ஒட்டு மொத்தமாக மனிதர்கள் என்ற ஓரினனத்தவர்களே அழித்தொழிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

ஆனால் அவர்கள் அனைவரையும் அழித்ததென்னவோ ஒரேயொரு கடல்தான்.

உயிரpழக்காது தப்பியவர்களையும் பாதிப்படையாதவர்களையும் ஒரே விதமாகக் கதற வைத்திருப்பதுவும் இந்த ஒரே கடல்தான்.அதாவது நீர்தான்.

ஆனால் அத்துடன் மட்டும் நின்று விடாமல் ஒரு புத்தம் புது புதுமையையும் இந்த அனர்த்தம் நடத்திக் காட்டியிருக்கின்றது. அதுதான் முழு உலகமுமே முதல் தடவையாக ஒட்டு மொத்தமாக இந்த மாபெரும் துயரில் பங்கு கொண்டமையாகும்.

சகோதரத்துவமும் மனிதாபிமானமும் அன்பும் பரிவும் பிறர் சிநேகமும் புரிந்துணர்வுகளும்தான் மனிதத்தைக் காப்பாற்றக் கூடிய உயர்வான உயிர்மைமிக்க தாரக மந்திரங்கள் என்பதைத்தான் இந்த அனர்த்தத்தைப் பிரதிபலித்த உள்ளங்களின் உந்துதல்கள் உண்மையாக எடுத்துக் காட்டிக் கொண்டு இருக்கின்றன.

இதன் மூலம் உலகில் கடந்த சில காலமாக மிக வேகமாகப் பரவிக் கொண்டு வந்த மனிதாபிமான மறுப்புக்களுக்கும் நீதிக்கெதிரான செயற்பாடுகளுக்கும் இறைவனின் வெறுப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றால் அதிலும் நியாயமிருக்கின்றது என்பதே சரி.

இரக்கமே அற்ற கல்நெஞ்சினர்களாகிய மனித குலத்தின் மனித விலங்குகளின் கடந்தகால தந்திரங்களும் நரிக்குணங்களும் வஞ்சகங்களும் இனிப் படிப்படியாக அம்பலமாகி, எண்ணெய்யில் நனைந்து நழுவும் ஆடையைப் பிடித்துக் கொள்ள முடியாமல் நிர்வாணியாகி நடுத்தெருவில் மானமிழக்கும் பரிதாபிகளாக இனத்துவேஷிகளும் மதத் துவேஷிகளும் மொழித் துவேஷிகளும் சாதித் துவேஷிகளும் ஆகப் போகின்ற நிலைமை உருவாகினாலும் ஆச்சர்யமில்லை.

ஆனால் தீயவர்கள் எப்போதுமே தந்திரத்தில் கைதேர்ந்தவர்களாகவே இருப்பதனால் இந்த அனர்த்தத்தை வைத்தே தங்களை வளர்த்துவிடப் புதுவழிகளை உருவாக்க முயலாமல் இருக்கவே மாட்டார்கள்.

இந்த நிலையில் அவர்களின் செவிகளில் புகுந்து இதயத்தில் துளைக்க வேண்டியதெல்லாம் இறைவனின் குரலாக இந்த அனர்த்தத்தினால் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த வரிகள்தான்:

“மனிதர்களே!எனக்கு முனபாக் நீங்களெல்லாருமே ஒருவர்தாம்.
உங்களை இந்தச் சுனாமியின் மூலம் எச்சரிக்கின்றேன்:
உங்களில் எவனொருவன் தன் அயலவனைத் தாழ்த்தவோ வீழ்த்தவோ அழிக்கவோ முயலுகின்றானோ... எவனொருவன் எனது வழியை ஆளவோ அடக்கவோ திசை திருப்பவோ முயல்கின்றானோ....
எவனொருவன் என்னிலும் மேலாக எழும்பி நிற்க, என்னை மீறிய சக்தியைத் தேடி அடைய முயலுகின்றானோ....

அவனால் உங்களுடைய மனித இனம் அழிவையல்லாமல் மீட்சியைக் காண்பது அரிதிலும் அரிது.

ஒழுங்காக வாழ்ந்தால் உயர்ந்திருப்பீர்கள்.
ஒழுங்கிழந்து வாழ்ந்தால் ஒழிந்தே போவீர்கள்.”


தமிழமுதம்
Friday, 14 January 2005 01:00
posted by Unknown @ 9:22 PM   0 comments
பாம்புகளே! வெறி கொண்டலையும் ஓநாய்களே! சுனாமி அனர்த்தமும் கூட உங்களிடமிருந்து தப்பமுடியாதா?
Montag, Juli 28, 2008
பாம்புகளே! வெறி கொண்டலையும் ஓநாய்களே! சுனாமி அனர்த்தமும் கூட உங்களிடமிருந்து தப்பமுடியாதா?



(2004ம் ஆண்டு இறுதியில் ஆசியாவையே அழித்து அதிர்ச்சிக்குள்ளக்கி விட்டு நின்ற கொடிய சுனாமியை அடுத்து நடந்த அரசியல் பயங்கரங்களை நினைத்து வடித்த கண்ணீர்க் கட்டுரை இது)



இலட்சக் கணக்கில் உயிர்களைப் பறித்தும் உடைமைகளை அழித்தும் ஊழிக்கால அட்டகாசத்தை நடத்தி விட்டு இன்னமும் அச்சுறுத்திக் கொண்டேயிருக்கின்ற சுனாமிப் பேரனர்த்தத்தின் கதைகள் அவலங்களுடன் அசிங்கங்களாக ஒவ்வொன்றாக படிப்படியாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
இந்த அனர்த்தம் பற்றிய எச்சரிக்கையை முன்னறிந்திருந்தும் வேண்டுமென்றே சில பொறுப்பு வாய்ந்தவர்களால் அசட்டை செய்யப்பட்டமை இந்த அழிவினைப் பேரழிவாக்கிவிட ஒரு காரணம் என்றும் கருத்துக்கள் பரவத் தொடங்கி வருகின்றன.

அரசியலில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் அதர்மர்களும் சந்தர்ப்பவாதிகளும் இந்தப் பாரிய அனர்த்தத்தை ஒரு கவசமாக அணிந்து கொண்டு தங்களின் வஞ்சகங்களையும் தந்திரங்களையும் சதிகளையும் கழுத்தறுப்புக்களையும் கட்டவிழ்த்து விடத் தொடங்கியுள்ளார்கள் போலவும் மனதை நோக வைக்கத்தக்க செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மக்களின் பரிதாப நிலையையும் தடுமாற்றங்களையும் எதிர்காலம் பற்றிய சூனிய நிலைமையையும் பயன் படுத்திக் கொண்டு அந்த பலவீனங்களில் பல தீய சக்திகள் சுயலாபம் தேடிடும் கதைகளும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

நம்பவே முடியாத கொடூரமான செய்திகள் அவை.

இறந்து கிடந்த பிணங்களின் உடலுறுப்புக்களை அறுத்து அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களைக் கொள்ளையடித்திருக்கின்றது ஒரு கூட்டம்.

அகதி முகாம்களிலும் அநாதரவாகவும் இருந்து தவித்த இளம் பெண்களும் தாய்மார்களும்கூட பல காமுகக் கழுகுகளால் பாலியல் வனமுறைக்கும் கும்பல் பாலியல் வன்முறைக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அகதிகளுக்காகவென்று அனுப்பப்பட்ட பல நிவாரணப் பொருட்களும் பெருமளவிற்கு பலாத்காரமாகக் காடையர்களினாலும் அவர்களுடன் ஒத்துழைத்து ஒத்தாசை புரிந்த நகர்க் காலர்களினாலும் படையினரினாலும் பலாத்காரமாகப் பறித்தெடுக்கப்பட்டு லொறி லொறியாகக் கடத்தப்பட்டுள்ளனவாம். கடத்தப்படுகின்றனவாம்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் இனரீதியாக ஓரங்கட்டப்பட்டு அவர்களுக்கான உதவிப் பொருட்கள் பாதிக்கவே படாத பிற இன மக்களுக்கு இனவாத இராணுவ மற்றும் அரச அதிகாரிகளினால் பகிர்ந்தளிக்கப்படுகின்றனவாம்.

கேவலத்திலும் கேவலமாகப் பச்சைக் குழந்தைளையும் இளம் பெண்களையும் கடத்திக் காமவெறிப் பணிக்கென விற்றுப் பணம் தேடிக் கொண்டிருக்கின்றனவாம் சில பிசாசுக் கும்பல்கள்.

உலக நாடுகள் அள்ளி வழங்கும் உதவிகளை இனவெறி பிடித்தவர்களின் ஆட்சியிலிருக்கும் நாடுகள் அப்படியே துர்ப்பிரயோகம் செய்து தங்களின் அரச படைபலத்துக்கான அத்திவாரங்களுக்கு அடிப்படை வேலைகளைச் செய்து வருவதாகவும் சந்தேகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

எதிரியின் ஒழுங்குகளைச் சிதைப்பதே அரசியல் வெற்றியின் தந்திரம் என்பதைப்போல அரசியல் நரிகள் அன்னிய நாட்டு ஆயுதப் படைகளை உள்ளிழுத்து உதவி கேட்டு படிப்படியாக அதனை வைத்தே மக்களெழுச்சியை அடக்கி வைத்திட மிகவும் சாதுர்யமாக மிலேச்சத்தனத்தை மனிதாபிமான உருவில் அமுல்படுத்திட முயன்று கொண்டு வருகின்றார்களாம்.

மனிதாபிமானப் பணிகளிலும் தங்களின் எதிரிகளுக்கு நற்பெயர் வந்துவிடக் கூடாது என்று ஆழ்ந்து சிந்தித்து அநியாயத்தை நடைமுறைப்படுத்தும் நாகங்களும் நரிகளும் பூரான்களும் பல்லிகளுமாக கடலுண்ட கரைகளிலெல்லாம் புதிய அராஜக நோயொன்று வெடித்துப் பரவிவிடுமோவென்ற நியாயமான அச்சம் மனிதாபிமானிகளின் இடையிலே பரவி வரத் தொடங்கியள்ளதாம்.

ஆனால் இந்த சுனாமியால் சூறையாடிவிட முடிந்ததெல்லாம் உயிர்களையும் உடைமைகளையும்தான். ஆனால் அவற்றுக்கெல்லாம் மேம்பட்ட ஒன்றை மட்டும் அதனால் சூறையாடவே முடியவில்லை. முடியவும் போவதில்லை.

அதுதான் மக்களின் அடிப்படை உரிமைக்கான சுதந்திர உணர்வு.

அந்த உயரிய இலட்சிய உணர்வின் மீதுதான் இப்போது ஆயுதமில்லாத அதிகார அடக்குமுறை இனவெறி அரசியல்வாதிகளினால் நடைமுறை ஏற்பாடுகள் என்ற மூடுதுணியுடன் ஏவிவிடப்படத் தொடங்கியுள்ளதாம்.

உண்மையான நண்பனை ஆபத்து சூழ்கின்ற வேளையிலேயே சரியாய் அறிய முடியும் என்று சொல்வதுண்டு. அன்னிய ஐயாமார்களும் அனர்த்து உதவி நல்ணெ;ணக்காரர்களும் இனிவரும் நாட்களில் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறத்தே இந்த சுனாமியின் அனர்த்தத்தை எவர் எவ்வாறு சரியாக அர்த்தப்படுத்தி நிற்கின்றார்கள் தெரியவரும்.

அப்பாவி மக்களை அழித்தாவது மனிதாபிமானத்தை உணர வைக்கப் பார்ப்போம் என்று அந்த இறைவன் நினைத்து இந்த அனர்த்தத்தை அனுப்பி இருந்திருந்தால் இன்றைய மீட்புப் பணிச் சூழ்நிலையில் இந்த மனித விரோத மனித விலங்குகளின் வாலாட்டங்களினால் நிச்சயமாக நிலைகுலைந்தே போவான்.

ஆனால் ஆன்றோர்கள் எற்கனவே சொல்லியிருக்கின்றார்கள். சில நல்ல நம்பிக்கைக்குரிய விடயங்களை.

இதோ இவற்றில் சில:

காரணமில்லாமல் காரியமில்லை.
சம்பவங்களெல்லாம் முடிவுகளல்ல.
நடப்பவை எல்லாம் நன்மைக்கே!
நாமொன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கும்
கடமையை நீ செய். தீர்ப்பை அவனிடம் விட்டுவிடு

காலதேவனின் கருத்து நீதியைக் காக்குமென்பதுதான் அன்றுமுதல் ஆன்றோர் நம்பிக்கையாக இருந்து வந்தது. அதனால் இதயத்துக்குள் நம்பிக்கை வருகின்றது.

"நம்பிக்கையே! தயவு செய்து நீ அப்படியே இருந்து கொள்“ என்று வேண்டிக் கொள்வோம்.

அதுசரி… நல்லவற்றை அனுபத்தில் கண்டு சொன்ன ஆன்றோர்களைப் போல இன்றைக்கு யாரிருக்கிறார்கள்?

மூச்! அவர்களின் சகாப்தம் முடிந்துவிட்டது.

இப்போது அவர்களின் வேடத்திலிருப்பவர்கள் மட்டுமே இருக்கின்றார்கள்.

யாரவர்கள்?

பூசணிக்காயைப் பார்க்க பூதக் கண்ணாடியைக் கேட்கிறீர்களே!


தமிழமுதம்
Thursday, 06 January 2005
posted by Unknown @ 8:07 PM   0 comments
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
பதிவுகள்
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
© 2007 எண்ண முகில்கள் Design by சோழியான்