எண்ண முகில்கள்

காலப் பதிவுகளின் கோலத் தமிழ்!!

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
ஊடுருவும் எழுத்தே ஆழமானது
Mittwoch, Oktober 31, 2007
ழுத்துக் கலையானது மிகவும் விருவிருப்பான ஒரு விளையாட்டு. இதில் எவரும் பங்கேற்க முடியும். இதில் தவழலாம்; நடக்கலாம்; ஓடலாம். ஆனால் சோர மட்டும் கூடாது. தவழ்பவர் முதலில் எழுந்து கொள்ளவும் பிறகு நடந்து கொள்ளவும் பக்குவப்பட்டதன் பிற்பாடுதான் ஓடத் துவங்க வேண்டும். இல்லையேல்.... வேறென்ன? அம்போ! அவ்வளவுதான்.

ஆற்றுக்குள் இறங்கிக் குளிக்க ஆர்வம் வந்தால் முன்பின் யோசிக்காமல் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையோடு தொப்பென்று குதித்துவிடல் புத்திசாலித்தனமல்ல. அதற்குள் சேறு இருக்கலாம். கூரிய மரக்குச்சிகள் புதைந்து நீட்டிக் கொண்டிருக்கலாம். கூரான பாறையொப்ப கற்கள் இருக்கலாம். குழிகள் இருக்கலாம். முதலை போன்ற ஆபத்தான உயிரினமேதும் கூட இருக்கலாம்.

ஆழமறிந்து அகலமறிந்து இறங்கினால் ஆபத்தைத் தவிர்க்கலாம். குளித்தின்பம் அடையலாம். இல்லாவிட்டால்? அதிர்ஷ்டமிருந்தால் நல்லது. அல்லது ஐயகோதானே!

ஆசை வேறு. ஆர்வம் வேறு.

எழுதுதல் வேறு. எழுத்தாளுமை வேறு.

சிந்தனை வேறு. சிந்தனையாற்றல் வேறு.

ஒரு வேடிக்கையான உதாரணக் கதையைக் கேளுங்கள். ஒரு கடையில் பல சில்லறை ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் நீண்ட காலம் அங்கே வேலை செய்து கொண்டிருந்தவர்கள். அவர்களுக்குள் சிலர் சின்னச் சின்ன திருட்டு வேலைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

தொலைபேசியில் வரும் விண்ணப்பங்களுக்கு (ஆர்டர்) பொருட்கள் கொண்டு செல்லும் சாக்கில் கூட ஒன்றிரண்டு பொருட்களைப் போட்டுக் கொண்டு போவது மாலையில் வேலை முடிந்து போகும் போது எதையாவது சிறிதான பொருளைச் சுருட்டிக் கொண்டு நகர்வது இப்படிப் பல சிறு சிறு கைங்கர்யங்கள் அங்கே நடந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் புதிதாக ஒருவர் அங்கே வேலைக்குச் சேர்ந்தார். ஒரு வாரத்துக்குள் அவர் கண்களுக்கு இந்தக் கூத்துக்கள் தென்பட்டு விட்டன. இவரும் அவர்களுடன் ஒரு கோவிந்தா தானே! அதனால் அவர்கள் இவரை அதிகம் இலட்சியம் செய்யாமல் தத்தமது கடமைகளுடன் இந்த வழமையான வேலைகளையும் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

எல்லாப் புதுத் தொழிலாளர்களும் காட்டும் 'ஆரம்ப நேர்மை' அவரது மண்டையைக் குடைந்தது.

மெதுவாக அந்நிறுவக மேற்பார்வையாளரின் காதில் நடந்து வரும் சங்கதியை ஊதி விட்டார்.

இவர் அவரிடம் பதிலாக எதிர்பார்த்தது ஒரு சபாஷைத்தான். ஆனால் அவரோ இந்த புத்தம்புது நேர்மையின் தலையில் சொட்டுச் சொட்டாகக் கொதிக்கிற எண்ணெய்யை விட்ட கதையாக இரகசியமாக ஒரு மூலைக்கு அழைத்துத் திட்டோ திட்டென்று திட்டித் தீர்த்து விட்டார்.

"ஏய் முண்டம். உன் வேலையை மட்டும் நீ பார்த்துக் கொண்டு போ. மற்றவர்களைப் பற்றி அதை இதைச் சொல்வதை இன்றையோடே நிறுத்திக் கொள். அவர்களுக்குத் தெரிந்தால் உன்னை ஒரு மூலைக்கு இழுத்துப் போய் பாரமான எதையாவது தலையில் போட்டுக் கொன்றாலும் கொன்று விடுவார்கள். முதலாளியிடம் போனாயோ அவ்வளவுதான். அவர்களுக்கல்ல. உனக்குத்தான் சீட்டு கிழியும். ஜாக்கிரதை!"

நேர்மை நாயகருக்கு முழுத்தலையுமே கழன்று விட்டாற் போன்ற பெரிய அதிர்ச்சி. 'என்னடா இது? நியாயத்துக்கு இங்கே இடமேயில்லையே!' என்று பெரிய கவலை. பிறகு 'நமக்கென்ன நமது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டால் போதாதா? நமக்கேன் ஊர் வம்பு?' என்று தனது ஞானக்கண்ணைச் சற்றே திறந்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

அவரது சிந்தனையில் அவருக்குப் புத்தி சொன்ன மேற்பார்வையாளர் எதற்காக அப்படிச் சொன்னார் என்பது புரியவில்லை. வேலிகளே பயிரை மேய்வது என்பது மனிதரில்தான் சாத்தியம் என்ற உண்மை அவருக்குத் தெரிந்திருக்காததுதான் காரணம். அனுபவ வறியர்.

கொஞ்சக் காலம் கடந்தது. இப்போது நமது நேர்மை கொஞ்சம் 'சீசன்' ஆகிவிட்டார். அவ்வப்போது நடக்கும் 'சிறுசிறு'க்களுக்கு இவரும் இலாபம் கருதாத ஒத்துழைப்பாளரானார். உதாரணமாக பத்து டின் சீஸ் என்று ஆர்டர் வந்தால் கடத்தும் கூட்டாளியின் கண்சாடை வேண்டுகோளின்படி பன்னிரண்டை எடுத்து அடுக்கி விடுவார்.

காலம் நகர்ந்தது. சக ஊழியர்கள் இவருடன் நல்ல நட்பு. ஒத்துழைப்பு கொடுத்த பலன். ஆனால் வேறு எதுவுமே இல்லை. படிப்படியாக நமது நேர்மையருக்கும் சபலம் தட்டத் தொடங்கியது.

முதல் தடவையாக சிந்தித்தார் அவர். பலரும் மாலையில் விடைபெற்று வெளியேறும்போது பயமில்லாமல் தங்கள் பைகளில் அதை இதைப் போட்டுக் கொண்டு முதலாளியின் முன்பாகவே கடந்து போகிறார்களே! எப்படி?

அவரது அறிவு இப்படி பதில் சொன்னது. 'அவர்கள் ஒளித்து எடுத்துக் கொண்டுபோனால்தானே; சந்தேகம் வரும். ஆகவே பயமின்றி சாதாரணமாகப் போவதுபோல போனல்தான் சரி என்றிருக்கும்'

அன்றே நமது சிந்தனையாளர் முடிவெடுத்தார். 'இனியும் நாம் சும்மா இப்படி இருப்பதில் அர்த்தமே இல்லை. நாமும் பின்பற்றி வெற்றி வாகை சூடுவோம். மனோகரா! பொறுத்தது போதும். பொங்கி எடு.'

அடுத்த நாள் மாலை. கடை பூட்டப்படுமுன்பு ஐயாவுக்கு ஒரே படபடப்பு. ஒரு மூலையில் ஒரு பெரிய கட்டி லக்ஸ் சவர்க்காரத்துண்டை எடுத்து 'ரெடி' பண்ணிக் கொண்டார். எல்லாரும் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டிருக்க இவரும் இடையில் அவர்களுடன் தன்னைச் சொருகிக் கொண்டார்.

'போயிட்டு வாறேன் மொதலாளீ!' என்றவர் என்ன முழி முளித்தாரோ! முதலாளி கேட்டார்

"ஏய் திரும்பு! என்னது ஒன் சட்டைப் பையிலே?"

நமது மனோகரன் பச்சை மின்சாரக் கம்பிச் சுருளுக்குள் விழுந்துவிட்ட எலிக்குஞ்சாகக் கதறினார்.

"ஒண்ணுமில்லீங்களே!"

முதலாளி எழுந்து வந்து அவரது சட்டைப் பைக்குள் கையை விட்டு சவர்க்காரத்துண்டை எடுத்துவிட்டு இராமன் விட்ட அஸ்திரமாகச் சுடோ சுடுவென்று சுட்டார். சுற்றி நின்ற பட்டடாளங்கள் நகைத்துக் கொண்டிருக்க அவருடைய சீட்டைக் கிழித்து விட்டு வீட்டுக்கு அனுப்பினார்.

இராமன் இராவணனை நோக்கிச் சொன்னானாம், " இன்று போய் நாளை வாராய்“ என்று.

முதலாளி சொன்னார், "இன்றைக்குப் போ! இனி என்றைக்கும் வராதே!"

நமது சிந்தனையாளர் நன்கு திட்டமிட்டு மிக மிகச் சரியாய்த்தான் தமது செயல்பாட்டை நடத்தி இருந்தார். ஆனால் அது படுதோல்வியில் முதல் நாளிலேயே முடிந்தது ஏன்?

வீடு திரும்பும் வழியில் தலையை இரண்டாகப் பிளந்தபடி சிந்தித்தும் அவருக்குப் புரியவே இல்லை.வரவேற்ற மனைவியின் முகத்தில் தன் கணவரின் அபார சாமர்த்தியத்தின் தாக்கம் புரிந்துவிட்டதை உணர்ந்தவர் மெதுவாக அவளிடம் நடந்த கதையை விபரித்தார்.

அவள் அமைதியாகச் சொன்னாள்.

"மடச் சனியன் மனுசனே! என்ன ஷேர்ட் போட்டிருக்கீர்? மூளையே கிடையாதா?"

ஞானக் கண்ணர் சட்டெனக் குனிந்து தனது சட்டையைப் பார்த்தார்.

அடடா! சுத்த நைலான் சட்டை. கண்ணாடி போல அப்படியே அவர் அணிந்து சென்றிருந்த உள் பனியனைக் காட்டிக் கொண்டிருந்தது.

பையில் போட்டுக் கொண்டதும் நிதானமாக நடந்த வந்ததும் ஆபத்தைத் தரவில்லை. நைலான் ஆடைக்குள்ளிருக்கும் பொருள் பளிச்சென்று தெரியுமே என்று சிந்திக்காமல் விட்டது மட்டும்தானே அடிவயிற்றிலேயே அடித்துப் போட்டது? 'அடச் சீ! உலகமகா மடையன் நான்.' அலுத்துக் கொண்டார் திருவாளர் ஆதிநேர்மை. காலங் கடந்த ஞானம் கைகொட்டிச் சிரித்தது.

இது இலங்கையில் கொழும்பில் நடந்த ஓர் உண்மைக் கதை.

புதுமுக எழுத்தாளர்களின் அனுபவம் பக்குவப்படுமுன் பெரிய முடிவெடுத்து விடக் கூடாது என்பதை வலியுறுத்தவே இந்த நகைச்சுவைச் சம்பவத்தைக் கூறினேன். இதை வைத்துப் பெரிய எழுத்தாளர்கள் என்பவர்களை மற்ற கடைவட்டங்களுக்குள் கலந்துவிடாதீர்கள். பாவம்.

தத்தனது பாட்டுக்கு வாழ்பவனின் சிந்தனையும் ஓர் எழுத்தாளனின் சிந்தனையும் ஒன்றன்று. முன்னையது தன்னகர்வுக்கான தனிப்பட்ட சிந்தனை. மற்றது பொது நோக்கிற்கான தனித்துவமான சிந்தனை.

இந்த இரண்டாவது ரக சிந்தனையை வளர்க்கும் விதமும் அதை அமைக்கும் விதமும் அதை அளிக்கும் விதமும் ஒருவித கலையையொப்ப காரியமாக இருப்பதுதான் எழுத்தாளுமையின் அடிப்படையாகும்.

எழுதுதல் வேறு. எழுத்தால் ஈர்த்தல் வேறு. புலம்பெயர் வாழ்வின் எழுத்துலகச் சூழலில் ஆழமாக வேர்விட்ட மரங்களுடன் ஆங்காங்கே மழைக்கு வளர்ந்த காளான்களும் சமத்துவம் பாட விழைவதும் சமத்துவமாக நின்று கொள்ள முயலுவதும் நமக்கெல்லாமே நன்கு தெரிந்த விடயந்தான் என்றாலும் சற்று விரிவாக இது பற்றி நாம் கலந்து கொள்வது தவறல்ல என்று நினைப்பதே இதை எழுதுவதன் நோக்கமாகும்.

சில தந்திரமான தகுதியில்லாத எழுத்தாள பதவி முன்னோக்கிகள் கடைப்பிடிக்கிற ஒரு நரி விளையாட்டை அவதானித்திருக்கிறீர்களா?

முதலில் அப்பாவிகளாக வந்து ஒரு வளர்ந்த எழுத்தாளரை அணுகுவார்கள். மெதுவாகப் பேச்சுக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பிசின் கலந்தவர்களாக ஒட்டிக் கொள்வார்கள்.

முதலில் புத்தி கேட்பவர்களாகக் காட்டிக் கொள்வார்கள். பிறகு படிப்படியாகப் புத்தி சொல்லுமளவிற்கு தடிப்படைவார்கள். அறிவிலல்ல, அதிகப் பிரசங்கித் தனத்தில். இதை வாசிக்கின்ற சில தரமாக வளர்ந்த எழுத்தாளர்களில் பெரும்பாலோர்க்கு இந்த அனுபவம் இருக்கவும் கூடும்.

செய்தியைத் தருவது என்ற விதத்திலே மரண நோட்டீசும் ஒரு பத்திரிகைதான். திருமண அழைப்பிதழும்கூட பத்திரிகைதான். அதாவது ஒரு செய்தியைச் சுமக்கின்ற ஏடுகள்தாமவை.

ஆனால் பத்திரிகை அல்லது சஞ்சிகை என்று தனித்துவமாக அங்கீகாரத்துடன் வெளி வரும் பத்திரிகைக்கும் அறிவிப்பு விடும் அவற்றிற்குமிடையில் பாரிய வித்தியாசங்களுண்டு.

முன்னதற்கு தகுதி வரைமுறை அத்தியாவசியமல்ல. ஆனால் பின்னதற்கு என சில தனிப்பட்ட தகைமைகள் இருக்க வேண்டும். வெறும் எழுத்துப் பிழை பார்க்கும் ஆசிரியர் முதலிரண்டு பத்திரிகைகளுக்கும் சரி. ஆனால் அதற்கு மேலும் சில தகுதிகள் இந்த மூன்றாவது பத்திரிகையின் ஆசிரியருக்கு வேண்டும்.

தடி எடுத்தவனெல்லாம் காவலனென்றால் கள்ளனும் அதற்குள் வந்து விடுவது சாத்தியமென்பது தெரிந்திருக்க வேண்டும்.

சில மனிதர்கள் சில நோக்கங்களுக்காகச் சில வேலைகளைச் செய்வார்கள். வெளியில் பார்க்க ஏதோ பொதுத் தொண்டு போலத் தெரியும். சரியாக அவதானித்துப் பார்த்தால் அது ஒரு முகமூடி என்றும் பின்முகத்தில் சுயநலம் என்ற உணர்வும் முன்னேற ஏற்ற வழியாக ஏமாற்றுத்தனத்தை ஏற்றவிதமாக ஊருக்கேற்ப மாற்றி நடத்தும் கயமை என்றும் புரியும்.

எழுதும் ஆர்வம் வந்துவிட்டால் அதை விட்டு விடக்கூடாது. தொடர்ந்து எழுதி எழுதி வர வேண்டும். அப்போது நமக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். அதாவது நம்மையுமறியாமலே நாம் எழுதுவதிலுள்ள கருத்துக்கள் பற்றிய ஒரு தனிப்பட்ட விமர்சனம் நமக்குள் எழும். இந்த இடத்தில் நாம் தெளிவாக இருந்தால் பயமகன்று தனித்துவமாக எழுதும் ஆற்றல் பிறந்துவிடும் வழி பிறந்துவிடும் என்பதுதான் எனது அனுபவ நம்பிக்கை.

தொற்றி நின்று பெயரெடுக்கப் பற்றி நின்று கதை விடுவதை விடவும் தட்டி நின்று சத்தியத்தைச் சார்ந்து எழுதல் பலனளிக்கும்.

வேடிக்கையான சில மனிதர்களைக் கவனியுங்கள். அவர்களின் எழுத்துக்களில் எதையுமே கண்டு பிடிக்க முடியாதபடிக்கு நோக்கத்தில் வெறுமை மிதப்பது தெரியும். ஆனால் அது ஒரு படைப்பாக வெளிவந்திருக்கும். வெளியிட்டவர் ஓர் பத்திரிகை ஆசிரியரா? என்ன அடிப்படையில் அதை அவர் வெளியிட்டார்? பதில் : நாமறியோம் பராபரமே!

புகலிட எழுத்துலகில் புத்தம்புது மலர்களைத் தான் இலக்கிய உலகம் எதிர்பார்க்கின்றது. புதுப்புதுக் களைகளையா அல்லது காளான்களையா எதிர்பார்க்கின்றது? அதை உணராமல் எதையெதையோ எழுதிவிட்டு எழுத்தாள உரிமை பாடின் எப்படி அங்கீகாரம் கிடைக்க முடியும்?

புத்தம் புது எழுத்தாளராக ஒருவர் அறிமுகமானாலும் தரமான ஆக்கத்திற்கு அவர் படைப்பு உத்தரவாதம் அளிக்குமேல் பல முன்னணி படைப்பாளர்களையும் கூட அவர் விஞ்சி விடுவதை யாராலும் தடுத்துவிட முடியாது.

தரமும் தகுதியும் பலத்தையும் சிபாரிசுக்களையும் புறந்தள்ளி நிமிர்ந்து நிற்பதை எழுத்துலகத்தின் எடுபிடிகளால் தடுத்துவிடவும் முடியாது. அந்தளவுக்கு புதிய அறிமுக எழுத்தாளர்கள் தங்கள் சிந்தனைகளை வழிப்படுத்தித் தரப்படுத்துவதில் ஈடுபடுத்தினால்தான் புலம்பெயர் படைப்புலகம் மிகவும் ஒளிமயமான ஒரு இடத்தைப் பெற்றுத் திகழும். நடக்க வேண்டிய புதுமை நடந்து தீருவதாக இருக்கும்.

பத்தோடு பதினொன்றுக்கும் பத்தில் ஒன்றுக்கும் இடையில் வித்தியாசம் உண்டு. இன்றைய நிலையில் பத்தோடு பதினொன்றுகளே பரந்து இருக்கின்றன.

எதையும் எழுத நினைக்கு முன் எதற்காக எழுதலாம் என்றும் எப்படி எழுதினால் அதனால் நல்ல பயன் அதை வாசிப்பவர்களுக்குக் கிடைக்கும் என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும். பல சமயங்களில் இப்படி யோசிக்கையில் ஒன்றுமே தோன்றாது விடவும் கூடும். அதனர்த்தம் சிந்தனை பலவீனமல்ல. சிந்தனையைப் புடம் போடல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்போது சிறிது தாமதமாக எழுதினாலும் ஆழமான ஒரு படைப்புக்கான அத்திவாரம் நமக்கு நிச்சயமாகக் கிடைத்துவிடும் வாய்ப்பு உண்டு. பக்கம் நிரப்பும் பத்திரிகைகளல்ல, தரத்தைப் பரப்பும் பத்திரிகைகளே மக்களுக்கு அவசியமான சிந்தனை மருந்துகள்.

தரமறிந்து படிப்பது தரமறிந்த பழகுவதைப் போன்ற ஒரு சிறந்த பயிற்சியாகும்.

ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும். இதை எழுத்துலக நுழைவுக்கு முயலும் ஆர்வலர்கள் உணர்ந்து எழுத வேண்டும்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்றான் ஒரு சிறு வட்ட வாசி.

ஆவதும் எழுத்தாலே அழிவதும் எழுத்தாலே என்பான் எழுததுலக வாசி.

எழுத்தாலே எது ஆகும்? எது அழியும்? சிந்தித்தால் ஒரு பலனுள்ள ஆக்கத்தை நீங்கள் படைத்துவிடலாமே! முயற்சித்தாலென்ன?

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ -தவறு
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ!

தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா –அது
திரும்பவும் வராமே பாத்துக்கோ!

எழுதாதே..பிழையாய்..எழுதாதே!

(ஜேர்மனி, மண் சஞ்சிகை 2004 கார்த்திகை - மார்கழி இதழில் வெளிவந்தது.)
(தமிழமுதம், 22.11.2004)
posted by Unknown @ 6:59 PM   0 comments
ஈராக்கிற்குப் புதிய வயது நான்கு!
Dienstag, Oktober 30, 2007
நஞ்சுக்குப் பெயர் மாற்றினால் - அது
நலம் பயக்கும் பானமாகிவிடுமா?

உள்ளத்தில் இருப்பதை உண்மையாய் உரைத்தால்தான் அது உண்மையில் உண்மையாக இருக்க முடியும்.

சிரித்துக் கொண்டே "என் சகோதரனே! உன் நன்மைக்காக" என்று கூறிக்கொண்டு குத்துக் கத்தியுடன் நெருங்குபவனை நம்பவே முடியாது.

அன்பே தெய்வம் என்பதே எனது அடிப்படைக் கொள்கை என்று சொல்லிக் கொண்டே அயலவன் வீட்டுக்குத் தீ வைப்பவனை உண்மையான ஆத்திகன் நம்புவது மடைமையல்ல, பைத்தியக்காரத்தனம்.

குண்டுகளையும் துப்பாக்கி ரகைளையும் புதைத்து வைத்து சுதந்திர, சமாதான தானியங்களின் விளைச்சலை எதிர்பார்ப்பவன் மனிதாபிமானத்தின் உற்றவனாக மருந்துக்கும் இருக்க மாட்டான்.

தனது பிரச்சார பலத்தினால் பிடிக்காதவர்களைப் பற்றி பயமூட்டும் வதந்திகளை உண்மையாகவே மாற்றிக் காட்டி வைத்து, அடிப்படையில் தானே சகல பயங்கர செயல்களுக்கும் ஊக்கமும் உற்சாகமும் வழங்குபவனாக ஒருவன் இருந்தால் அவனால் கடைசிவரைக்கும் மனிதாபிமானத்துக்கு நிழல் கிடைக்கவே கிடைக்காது.

தனது சுயநலத்துக்காக நியாயங்களைக் காலின் கீழ் போட்டு மிதித்துக் கொண்டு, அதையே செய்யும் கெட்டவர்களையும் அணைத்துக் கொண்டு, நியாயங்களுக்காக என்று அநியாயங்களை நியாயங்களாகத் திரித்துக் கதை பரப்பி ஏமாற்று நாடகம் நடத்துபவனால் என்றைக்குமே நீதிக்கும் நியாயத்துக்கும் பாதுகாப்போ அரவணைப்போ உண்மையாகக் கிடைக்கவே கிடைக்காது.

நீங்கள் முறுவலிப்பது புரிகிறது.
குற்றக் கண்ணாடி அறைக்குள் ஒளிந்து நிற்கும் எவர்களை நான் குறிப்பிடுகின்றேன் என்பது தெரிந்துதானே சிரிக்கிறீர்கள்?
ஹஹ்ஹஹ்ஹா!

ஈராக்கில் சனநாயக விதையைத் தூவி, சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் வளமான வாழ்க்கையையும் அள்ளி வழங்கி, அங்குள்ள மக்களை மன நிறைவால் மூச்சுத் திணற வைத்த அமெரிக்க மகா புண்ணியத்தின் நான்காவது ஆண்டு நிறைவு இந்த 20ம் திகதியுடன் அடுத்த ஆண்டுப் படிக்குள் இறங்கி இருக்கின்றது. இன்னும் மோசமாக நிலைமைகள் உருமாறினாலும் மாறலாம்.

அமெரிக்காவின் நான்காண்டு சமாதான, சனநாயக அறிமுக இராணுவ நாடகத்தின் காட்சிகளாக இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடு, மாடுகளைப் போலவும் கோழி, வாத்துக்கள் போலவும் குத்திக் குதறப்பட்டு, சுட்டுப் பொசுக்கப்பட்டு, கற்பு பறிக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உட்பட்டு, இறுதியில் படுகொலைக்கு ஆளாகிப் புதைகுழிகளில் 655000 பேருக்கு மேல் புதைக்கப்பட்டும் சனநாயகம் அன்னநடை கூட நடக்கமுயலாமல் குண்டு வெடிக்கப் பதறி நடுங்கும் நிலைதான் வளர்ந்து கொண்டு இருக்கின்றது.

கணக்குக்குள் அடங்காமல் புதைந்தும் சிதைந்தும் எரிந்தும் அழுகியும் அழிந்தொழிந்தவை எத்தனையோ! அந்த ஏசுவுக்கும் அல்லாவுக்குமே தெரியும். அல்லாஹ:_ ஆமென்.

இது தவிர, 3200க்கும் அதிகமான அமெரிக்க இராணுவத்தினரும் இன்னும் இதர நாட்டுத் துருப்புக்களுமாக வேறு ஒரு தொகையும் செத்து புண்ணியம் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த நாட்டின் அத்தனை தலைவர்களும் பொது மக்களும் தினம் தினம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சமத்துவமாக உயிருக்குப் பயந்து நடுங்கிப் பதுங்கிப் பதுங்கியே உயிர் வாழும் சர்வ சமத்துவம் நிரம்பி வழிகின்றது. பயமூட்டும் புதிய சனநாயகமே அறிமுகமாகி வருகின்றது அங்கே.

சனநாயகத்தை அங்கே கொட்டப் போன உலக மகா மாவீரர்களும் அவர்களுக்கு வால் பிடித்த தொற்றிகளும் அந்நாட்டு மக்களுக்கே தெரியாமல் படு இரகசியமாக வந்திறங்கி விட்டு, எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு மூட்டை முடிச்சுக்களுடன் புறப்பட்ட பின் தொலைக்காட்சிகளில் அவர்களின் வீரக்களை மிளிரும் காட்சிகள் வந்து மக்களை வியப்பிலாழ்த்திக் கொண்டு இருக்கின்றன.

இந்தக் கேவலத்துக்குள்தான் எங்கோ ஓர் மூலையில் சனநாயகத்தாய் ஒளிந்து{mosimage} கொண்டு, பதுங்கிக் கொண்டு, வெளிவர முயற்சிக்கிறாளாம். ஒன்று மட்டும் தெரிகின்றது. இப்படியே போனால் அங்கே சனநாயக தாய் என்று கூறிக் கொண்டு ஒரு சனநாயக விபச்சாரிதான் வந்து நிற்பாள்.

ஒரு கொடிய சர்வாதிகாரியின் சிறந்த ஆட்சி இந்த ஏமாற்று சனநாயகத்துக்கு எவ்வளவோ மேல் என்பதுடன் அவனின் ஆட்சியைக் குறை கூறி அவனையே அழித்தவர்களுக்கு அவனது திறமையில் பத்தில் ஒரு பங்கு கூட என்பதுமே இப்போது வெட்ட வெளிச்சமாகி வருகின்றன.

ஒரு கள்வர் அமைத்த போலீஸ் கூடம் போல அங்கே ஆட்சியில் ஒரே ஊழலும் பலவீனமும் கால் நக்கலுமாக மலிந்து, உலகமே சிரித்துத் துப்பிக் கொண்டு இருக்கின்றது.

மக்களுக்கு வாக்குச் சீட்டு மட்டுமே கிடைத்திருக்கின்ற ஒரே பலன். மற்றப்படி வாழ்க்கையும் பாதுகாப்பும் வருமானமும் சுதந்திரமும் சகல உரிமைகளும் சமாதியாகி விட்டமையே உண்மையான நிலையாகி வருகின்றன.

அங்கே முள்ளை விதைத்து நெல்லை விழைந்த புஷ் மாமா உலக மகா புகழ் பெற்ற கொடும்பாவியாக உலக நாடுகளில் எங்கணும் எரிக்கப்பட்டும் மிதிக்கப்பட்டும் வையப்பட்டும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்.

தனது தேசத்திலேயே அவரது புகழ் புதைகுழிக்குள் இறங்கிக் கொண்டு வருகின்றது.

பொய்யும் ஏமாற்றும் சுயநலமும் தந்திரமும் பணத்திமிரும் ஆயுத வெறியும் கொஞ்சக் காலத்துக்குத்தான் என்பதும் படர்ந்து எரிகையில் நெருப்பு பெரிதாக இருந்தாலும் அதுவே அதன் நிரந்தர முடிவாக மற்றவற்றைச் சாம்பலாக்கித் தன்னில் புகையாகி மறைந்தொழியும் என்பதும் உறுதியாகி வருகின்றன.

உலக அமைதிக்காக என்று கூறிக் கொண்டு உலக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் ஆயுத பல அணுகுமுறையில் அதீத நம்பிக்கை வைத்து விளையாடும் வல்லரசுக்களுக்கு வெற்றி நிரந்தரமல்ல என்பதும் அறிவில்லா பலமே அநீதியை நாடும் அறிவுள்ள பலமோ நீதியைத் தேடும் என்பதும் இனியாவது பாடமாகப் புரிந்தால்தான் நல்லது.

நீதியைப் பேசி வெல்லத் துணிவில்லாத அநீதியாளர்களே இந்த "பயங்கரவாத" முத்திரையைக் குத்திவிட்டு, அழித்து அடிமைப்படுத்திவிட முயலும் கலையைக் கையாள்கின்றார்கள்.

ஆனால் எங்கே நீதி உண்மையாக இருக்கின்றதோ, எங்கே சத்தியம் அத்திவாரமிட்டு இருக்கின்றதோ, அங்கேதான் துணிவும் திறனும் திட்டமிடலும் சரியாக நின்று வழி காட்டி வழி நடத்தும் என்பதே வரலாறு.

ஈராக்கில் அமெரிக்கா செய்த பாவம் அதன் நான்காண்டு நிறைவில் இன்று அதன் மீதான உலக நம்பிக்கைக்கே வேட்டு வைத்து விட்டிருக்கின்றது. பாவம்!

என்றைக்கு ஈராக்கில் தலைவர்கள் பயமின்றி பொது இடங்களில் நடமாடுவார்களோ, என்றைக்குத்தான் ஆக்கிரமிப்புப் படைகளுக்குத் தங்களுக்கு சனநாயக சந்தோஷத்தை அள்ளி வழங்கிமைக்காக அந்நாட்டு மக்கள் பூச்சொரிந்து நன்றி சொல்வார்களோ, அன்றிலிருந்துதான் மத்திய கிழக்கில் வல்லரசுக்களால் நம்பிக்கை பெறுவதில் பத்து வீதமாவது சரிவரும்.

அதுசரி…ஏனிந்த மேற்குலக சனநாயகத்தை அந்த சனங்கள் ஏற்ப மறுக்கிறார்களாம்?

அம்மண சுதந்திரமும் மதுசுதிச் சுதந்திரமும் நல்ல ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இஸ்லாமிய ஒழுக்கத்துக்கு ஒத்துவரா என்றுதானோ?

பசியும் வறுமையும் இதயசுத்தியான இறைபக்தியும் எளிமையான வாழ்க்கை முறையும் பசியையே அறியாத பணக்காரர்களுக்கும் ஆடம்பரம் அவசியமென நினைக்கும் மேல் தளத்தினர்க்கும் பேச்சில்தான் தெரியுமே தவிர, உணர்வில் புரியாது .

பிரஞ்சுப் புரட்சி வெடிக்கு முன்பு மக்கள் பசியால் வாடித் துடித்து ஆர்ப்பாட்டம் செய்கையில் அந்நாட்டின் அரசி ஆணவமாகச் சொன்னாளாம் "வெதுப்பு ரொட்டி (பாண்) கிடைக்காவிட்டால் கேக் சாப்பிடுவதுதானே!" என்று.

இந்த பணக்கார முதலைகளின் கபட நாடகத்தின் மேடையாக சனநாயகம் இருக்கும் வரைக்கும் உலகம் உய்வடைவது வெறும் கனவுதான்.

நான்கு வருடங்கள் கடந்து ஐந்தாவது ஆண்டு துவங்குகையில் அங்கே சவப் பெட்டிக் கடைக்காரர்களுக்குத்தான் முன்னேற்றம் இருக்கும் என்றால் இதற்கு என்ன பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும்?

சனநாயகம்? பிணநாயகம்?

சனநாயக முறைப்படி புள்ளடி போட விட்டுப் பார்ப்போமா?

மறைந்த பாடகர் ஏ.எம். ராஜா அவர்கள் "பாட்டு பாடவா பார்த்துப் பேசவா" என்ற மெட்டில் சொர்க்கத்திலிருந்து பாடுகின்றார்.
சைலென்ஸ் ப்ளீஸ்!

வாழ்த்துப் பாடவா?
பார்த்து ஏசவா?
யாரை அங்கு யார்..
அழைத்துச் செல்வதாம்?
மக்களாட்சி தோன்றுமென்று
சொன்ன கள்ளரால் - இன்று
நாடு பற்றி எரிகிறதே காக்கப் போவதார்?

(தமிழமுதம் 27.03.2007)
posted by Unknown @ 5:52 PM   0 comments
அப்பாடா! அநீதி தூக்கில் தொங்கப் போகின்றது!

மூன்று பசாசுகள் விரைவில் தூக்கிலிடப்பட தீர்ப்பளிக்கப்பட்டு இருப்பதாகத் தமிழகத்திலிருந்து வருகின்ற செய்தி கூறுகின்றது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டதை ஆட்சேபித்து வெறிநாய்களாக குதித்துத் திரிந்த பல அரசியல்வாதிகளுக்குள்ளிருந்து தலைவிரித்து வெறி பிடித்தாடிய மிக மோசமான மூன்று கீழ்தரமானவர்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது. நீதியின் அதிர்ஷ்டமோ என்னமோ, இந்த அரிய, அற்புதமான தீர்ப்பு வெளியாகுகையில் ஆட்சி அம்மையாரின் கைகளில் இல்லாமல் தமிழகம் கலைஞர் கைகளில் தப்பி இருக்கின்றது.

அவர் மட்டும் இவ்வேளையில் ஆட்சியில் இருந்திருந்தால் இவர்கள் புது வழிகளில் வெளியே வந்து குதித்து, மலர் மாலை சூட வலம் வந்து களை கட்டியிருப்பார்கள்.

கொலைகாரர்களுக்குக் கலை விழாக்களும் வெற்றி விழாக்களும் இனிப்பு வழங்கல் கொண்டாட்டங்களுமாக தமிழகமே விழா மண்டபங்களால் நிறைந்திருக்கவும் கூடும்.

மரண தண்டனை என்பது மனித நாகரீகத்துக்கு ஏற்காதது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. எத்தனையோ அப்பாவிகளை அநீதியால் முன்னேறத் துடிக்கும் கொலைக்கு அஞ்சாத, அதனை விரும்பும் சட்ட நாயகர்கள் தங்களின் சட்ட அறிவின் துர்ப்பயன்படுத்தல்களால் மரணத்தில் தள்ளி விட்டு, பணத்துக்காகப் பல படுபயங்கர பணக்கார கொலைகாரரைப் பாதுகாப்பதும் இரக்கமே அற்ற சுயநலமிக்கஅரசியல்வாதிகளும் கூட இந்தத் தண்டனையை வைத்துத் தமது சுயவெற்றிகளுக்கு வழியமைத்துக் கொள்கின்றனர் என்பதும் ஒன்றும் இரகசியமல்ல.

ஆனால் இதனை ஒரேயடியாக ஒழித்து விடுதல் நல்லதுதானா என்பதே இத்தகைய படுமோசமான கொலைகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகையில் நியாயத்தை விழைகின்ற சாதாரண பொதுமக்களும் சமுதாய நலன் விரும்பிகளும் தங்களுக்குள் எழுப்பிக் கொள்ளக் கூடிய கேள்வியாகும்.

அ.தி..மு.க. தலைவிக்குச் சிறையென்றால், அதற்காக எதிர்ப்பைக் காட்டுவது கடமையென்றால் அதை எப்படி சனநாயக முறைப்படி செய்வது என்பதைக் கூட அறிந்திராத படுமடையரா அ.தி.மு.க. அங்கத்தவர்கள்?

தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதே சரியென்றால் இதை எப்படி எடுத்துக் கொள்வது? அது தலைவனுக்குத்தான் தலைவிக்கு அல்ல என்று சட்டத்தில் ஓட்டை தேடி சமாளிப்பதைத் தவிர வேறென்ன செய்வது?

மூன்று மாணவிகளை உயிரோடு தீ வைத்துக் கொளுத்தியபோது பஸ்ஸில் அவர்கள் இருப்பதைப் பலரும் சுட்டிக் காட்டியும் அவர்களைத் தெரிந்து தீவைத்துப் படுகொலை செய்த படுபாவிகளின் மனங்களில் எத்தகைய அகங்காரமும் ஆணவமும் திமிரும் வெறியும் தேசப்பற்றை மிஞ்சிய கட்சி வெறியாகவும் சட்டத்தை மதிக்காத குண்டர் குணமாகவும் இருந்திருக்கின்றன என்பதைப் பார்க்கையில் இவர்களுக்கு மரண தண்டனை கூட குறைந்த பட்ச தண்டனைதானென்றல்லவா தோன்றுகின்றது?

இதையும் கூட முதல்வர் கருணாநிதியவர்களின் சதியென்று ஒரு புது அறிக்கை வந்தாலும் வரலாம். அதை வழிமொழிந்து தெரிந்தோ தெரியாமலோ கயிறென்று நம்பிப் பாம்பின் வாலில் தொங்கிக் கொண்டிருக்கும் வை.கோவும் எதையாவது உளறவும் கூடும்.

நல்ல சிந்தனையாளராகவும் துணிந்த கொள்கையாளராகவும் மதிப்புக்குரிய மக்கள் தலைவராகவும் வளர்ந்து வந்துவிட்டு, கேவலம் அரசியல் களத்தில் சில ஆசனங்களுக்காக செருப்புக்குக்காலை வெட்டி விற்ற முட்டாளாகிக் கிடக்கும் அவரை சரித்திரம் ஒரு கருங்கல்லாய்க் காட்சியளித்து வந்த களிமண் கல்லாக எழுதி வைத்து விடக் கூடாதே என்பதுதான் கவலையாக இருக்கின்றது.

தமிழகம் நீண்ட இடைவெளியின் பின்பு, இப்போதுதான் தமிழர் கைக்குள் வந்திருக்கின்றது. அதனை மீண்டும் தமிழரல்லாதவர்களிடம் ஒப்படைத்துத் தமிழர்களுக்குள் தலைவர்களே இல்லை என்பது போலவும் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்பு இல்லை என்பதுபோலவும் ஒரு மாயையை வளர்த்து அதன் மூலம் தமிழ் மொழியைக் கற்றுத் தேர்ந்த அன்னியர்கள் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து வருவதை உணராதவரா வை.கோ.?

நான் நம்பவில்லை. இவர் நன்கு விஷயமறிந்த ஒரு தலைவர். அனுபவசாலி. நேர்மையை நம்புகின்ற நல்ல மனிதர். ஆனால் ஐஸ் என்று அறியாது வேகமாக ஓடி சறுக்கி விழுந்த ஓட்டக்காரனாகவே அவர் இப்போது தரமிறங்கி நிற்கின்றார்.

அவரை வழுக்கி விழ வைத்த ஐஸ் அ.தி.மு.க. கொடுத்த பிச்சை தேர்தல் ஆசன சலுகையே ஆகும். அஞ்சா நெஞ்சம் கொண்ட சிங்கம் சர்க்கஸ்காரனிடம் கொஞ்சிப் பூனையான கதைதான்.

இனியாவது அவர் கதை மாற வேண்டும். அதை அவர்தான் மாற்ற வேண்டும். இந்த மரண தண்டனை அவர் சமூவிரோதிகளுக்கு வழங்கப்பட்டு நீதி காக்கப்பட்டதற்காகப் பாராட்டவும் பாதிக்கப்பட்ட சகோதரிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லவும் துணிந்து எழுந்தாலே போதும், ஒரு புதிய பார்வை அவர் மீது விழும் சாத்தியமுண்டு.

மாறாக, குதிரையோடு சேர்ந்த பாவத்துக்காகக் கனைக்க முனையும் சிங்கமாக அவர் முனைந்தாலோ அதுவே அவருக்கு அரசியல் தற்கொலையாகவும் ஆகிவிடலாம்.

என்னவோ அவரது வீரத்தையும் நேர்மையையும் முன்னைய கண்ணோட்டத்துடன் பார்ப்பதே கடினமாக இருக்கின்றது. எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதற்குள் சுப்பிரமணிய சுவாமி என்ற முகவரியில்லாத முக்கியஸ்தர் தமக்கு அட்ரஸ் வேண்டியோ என்னவோ தமிழக அரசைக் கலைக்க சிபாரிசு கூற முற்பட்டு இருக்கிறார்.

பால் திருட முனையும் பூனை அக்கம் பக்கம் பார்த்து நெருங்கினாலும் பரவாயில்லை. தனது கண்ணை மூடிக் கொண்டு எவரும் காண மாட்டார்கள் என்று பால் பானையென்று அடுப்புக்குள் குதித்துவிடாமல் இருக்க வேண்டும் என்று அந்த சுப்பிரமணிய சுவாமியை வேண்டிக் கொள்ள வேண்டியதுதான்.

மதுவருந்திக் கொண்டு மதுவெதிர்ப்பு கூட்டம் நடத்துவதும் நேர்மையின்றி நேர்வழி காட்ட விழைவதும் ஒன்றுதான்.

தமிழகமே! இனியாவது நீ கண் திறந்து இருந்து வா! உன்னை ஏமாற்ற ஏராளம் நல்ல வேட நாகங்கள் அங்கே இருக்கின்றன.

அட்டை உறிஞ்சுவதில் சுகமிருக்கலாம். ஆனால் உறிஞ்சப்படுவது உனது இரத்தம். மறந்து விடாதே! அது நல்ல இரத்தமா இல்லையா என்பதல்ல கேள்வி. அது உனது சொந்த இரத்தம். புரிந்து கொள்வாயா?

(தமிழமுதம் 19.02.2007)
posted by Unknown @ 5:49 PM   0 comments
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
பதிவுகள்
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
© 2007 எண்ண முகில்கள் Design by சோழியான்